America
America America
Lifestyle

America : மர்ம நபரால் கொட்டப்பட்ட 220 கிலோ பாஸ்தா!

ஜெபிஷா ஜெ ஷோ

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள காட்டில் மர்ம நபர் கொட்டிய 220 கிலோகிராம் பாஸ்தா!

பாஸ்தா பிரியர்கள் மனதை நொறுக்கும் சம்பவம் ஒன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி காட்டில் நடந்தேறியுள்ளது. மர்மமான முறையில் மர்ம நபர் ஒருவர் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள காட்டின் மரங்களுக்கிடையே கொட்டப்பட்டிருந்த 220 கிலோ கிராம் பாஸ்தாவின் புகைப்படத்தை நினா எனும் பெண் தனது முகநூலில் பதிவிட்டதை அடுத்து காவல்துறையும் விசாரித்து வருகிறதாம்.

மேலும், அந்த பெண் தனது பதிவில், "கொட்டப்பட்டிருப்பது வெறும் பாஸ்தா மட்டுமே, தொட்டுக்கொள்ளும் சாஸ், கிரேவி, சீஸ் எதுவும் இல்லை " என்று கூடுதல் தகவலையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு சிரிப்பை ஏற்படுத்தினாலும் நியூ ஜெர்சியின் தூய்மை பணியாளர்களுக்கு இது தீராத தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் பெய்த மழையால் அந்த பாஸ்தாவில் ஈரப்பதம் தொற்றிக்கொள்ள இன்னும் மென்மையாகி உள்ளது. எனினும் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் தூய்மை பணியாளர்கள் அந்த பாஸ்தாவை அகற்றியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து நினாவின் பதிவிற்கு ஒருவர், "அந்த பாஸ்தா எக்ஸ்பைரி நாள் கடந்ததாக இருக்கலாம்" என்று கமென்ட் செய்ய, நினா அந்த புகைப்படத்தின் பின்னணி பற்றி கூடுதல் விவரங்களை பகிர்ந்துள்ளார்.

"சிசிடிவி கேமராவில் ஒரு நபர் தன் தாயின் மரணத்துக்கு பின் அவர் வாழ்ந்த வீட்டை சுத்தம் செய்கின்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. அப்போது அந்த வீட்டில் பாஸ்தா அதிகமாக இருந்ததால் அவர் அதை அகற்றும் வழி அறியாமல் காட்டில் கொட்டியிருக்கலாம்" என்று நினா கூறியுள்ளார்.

அதோடு இந்த செயலில் ஈடுபட்ட நபர் ஒரு இராணுவ வீரர் என்றும் தனது சொந்தக்காரர் என்றும் பகிர்ந்த நினா, அதனால் அவரது பெயரை வெளியிட விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளாராம்.

- ஜெபிஷா ஜெ ஷோ.