thieft
thieft thieft
Lifestyle

'ஒரு ரூபாய் கூட திருட முடியல'-விரக்தியில் திருடப் போன இடத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் !

டைம்பாஸ் அட்மின்

பல காரணங்களுக்காக தற்கொலைக்கு முயன்றவர்கள் குறித்து கேள்விப்பட்டுள்ளோம். திருப்பூரில் பூட்டியிருந்த வீட்டுக்குள் திருட முயன்று மாட்டிக் கொண்டதால், அதே வீட்டுக்குள் தற்கொலைக்கு முயன்றவரிடம் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி போலீஸார் அவரை மீட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன்பாளையம் சிவசக்தி நகரில் பனியன் நிறுவன தொழிலாளியான வடிவேல் தனது மனைவி காயத்ரி, தாய் நாகம்மாள் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

திங்கள்கிழமை மாலை வெளியே சென்ற தனது தாயை அழைத்து வருவதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு வடிவேல் சென்றுவிட்டார். தனது தாயை அழைத்துக் கொண்டு வந்த பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருப்பதை அறிந்து உள்ளே சென்று பார்த்தபோது இளைஞர் ஒருவர் திருடும் முயற்சியில் தீவிரமாக இருப்பது தெரியவந்தது.

சத்தம் ஏதும் போடாமல் வீட்டின் கதவை வெளிப்பக்கமாக வடிவேல் பூட்டி விட்டு ஊத்துக்குளி போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

கதவைப் பூட்டியதால் உள்ளே சிக்கிய இளைஞர் என்னசெய்வதென்று தெரியாமல், வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு அங்கிருந்த வடிவேல் மனைவி காயத்ரியின் சேலையை எடுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அந்த நபர் வீட்டை விட்டு வெளியில் வந்தால்போதும் என்ற நிலைக்கு வந்த வடிவேலுவும், அப்பகுதி மக்களும் கெஞ்சாத குறையாக கேட்டுப் பார்த்தும் அவர் கதவைத் திறக்கவில்லையாம்.

அதற்குள் அங்கு வந்த போலீஸார், அவரிடம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போராடி அவரை வீட்டுக்கு வெளியே வரவழைத்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர் பலவஞ்சிபாளையத்தைச் சேர்ந்த பனியன் தொழிலாளி இஸ்மாயில் (30) என்பது தெரியவந்தது. அவரது குடும்பத்தில் 9 அக்கா உட்பட 13 பேர் உடன் பிறந்தவர்கள் உள்ளதால் வருமானம் போதாததால் திருட முயன்றதாகவும் பெருமாநல்லூர், அவிநாசிபாளையம், ஊத்துக்குளி என மூன்று இடங்களில் திருட முயன்று மூன்று முறையும் பிடிபட்டு விட்டேன்.

இதுவரை ஒரு ரூபாய் கூட திருட முடியவில்லை. தனக்கு சரியாக திருட கூட தெரியாததால் பேசாமால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிவித்துள்ளார். திருடப் போன இடத்தில் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது.