G20
G20 டைம்பாஸ்
அரசியல்

G20 மாநாடு : பூந்தொட்டிகளை காரில் வந்து திருடிய நபர்கள் !

சு.கலையரசி

டெல்லி-குருகிராம் எல்லையில் ஜி-20 மாநாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை சொகுசு காரில் வந்த இருவர் திருடிச் சென்றுள்ளனர். சொகுசு காரின் சொந்தக்காரர் திருடும் பூந்தொட்டிகளை டிரைவர் வாங்கி கார் டிக்கியில் வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் வித்தியாசமான முறையில் G20 உச்சிமாநாட்டை பிரபலபடுத்தியுள்ளது.

G20 என்பது ஒரு சர்வதேச மாநாடு, இது 19 நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் இணைத்து பொருளாதாரம், நிதி விவகாரங்கள் மற்றும் பிற முக்கிய அம்சங்கள் குறித்து ஆண்டுதோறும் நடத்தப்படும்.

டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2023 வரை G20 இந்தியா தலைமையில் நடைபெறுகிறது. இந்த G20 மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்வதை வரவேற்க ஹரியானா குருகிராம்  பகுதி சாலைகளில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்ட பூந்தொட்டிகளை உயர்தர கியா கார்னிவல் காரில் வந்து திருடிச் சென்றதை விசாரிப்பதாக குருகிராம் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி எஸ்கே சாஹல் கூறியுள்ளார்.