Tamizha Tamizha -வை ஹிட் ஆக்குவாரா ஆவுடையப்பன் ? - சிறிய இடைவேளைக்குப் பிறகு | Epi 21

என்னுடைய திருமணத்துக்கு வந்து வாழ்த்தினாங்க தமிழிசை சௌந்தர்ராஜன். 'தமிழா தமிழா' முதல் எபிசோடுலயும் அவங்க சிறப்பு விருந்தினர். நான் பா.ஜ.க. எதிர்ப்பாளர்னு சொல்றவங்களுக்காக இந்த விஷயத்தைச் சொல்றேன்.
Tamizha Tamizha
Tamizha TamizhaTamizha Tamizha
Published on

இந்தப்பக்கமும் இல்லை, அந்தப்பக்கமும் இல்லைனு ஒருத்தர் இருக்கவே முடியாது! 'தமிழா தமிழா'வை ஹிட் ஆக்குவாரா ஆவுடையப்பன்?

இன்றைய தேதிக்குத் தமிழ்த் தொலைக்காட்சி உலகில் ஆச்சரியமான ஒரு செய்தி என்னவெனில், 'ஆவுடையப்பன் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார்' என்பதுதான். யூ டியூப் சேனலில் நேர்காணல் செய்து கொண்டிருந்த இந்த இளைஞர், முன்னணி சேனலில் அதுவும் ஒரு திரைப்பிரபலம் வழங்கிய நிகழ்ச்சியில் அவருக்குப் பதில் அந்த இடத்துக்கு அவ்வளவு சுலபத்தில் வந்துவிடவில்லை. பலகட்டப் பரிசீலனை, ஏன் தேர்வெல்லாம் கூட எழுதித்தான் வந்திருக்கிறார்.

சென்னைக்கு வந்து வீடியோ எடிட்டிங்கில் பணியைத் துவங்கிய ஆவுடையப்பனுக்கு மரபு சார்ந்த மீடியாப் பின்னணி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் வாசிப்பனுபவம், மற்றும் அரசியல் நிலவரங்களைக் கவனிப்பதில் ஆர்வம் ஆகியவையே அரசியல் பேட்டிகளின் பக்கம் நகர்த்தியதாகக் குறிப்பிடுகிறார்.

''வீடியோ எடிட்டிங்கில் இருந்தாலும் சோஷியல் மீடியாவுல அரசியல் நிகழ்வுகளுக்குக் கமென்டுகள் போடத் தொடங்கினேன். விகடன் மாதிரியான வாரப் பத்திரிக்கைகள்ல என்னுடைய அந்தக் கமெண்டுகள் பிரசுரமாகியிருக்கு. நான் பணிபுரிந்த நிறுவனத்தில் என்னுடைய இந்த ஆர்வத்தைக் கவனிச்சிட்டே இருந்திருக்காங்க.

சினிமா பேட்டிகளையே எடுத்துட்டிருந்த நிறுவனத்துல ஒருகட்டத்துல அரசியல் பேட்டிகளையும் பண்ணலாம்னு முடிவு செய்தப்ப, 'டக்'னு என்னைக் கூப்பிட்டுட்டாங்க. அந்த மாற்றம் என் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனைனு சொல்லலாம். இன்னைக்கு சேட்டிலைட் சேனலுக்கு வந்திருப்பது இன்னொரு மைல் கல்'' என்கிறார் அவர்.

Tamizha Tamizha
TV Serial : 'எனக்கு விருது வேணும்!' - அடம்பிடித்த சீரியல் ஹீரோ - சிறிய இடைவேளைக்குப் பிறகு Epi 12

நிகழ்ச்சித் தொகுப்பில் நீண்ட அனுபவம் கொன்ட ஒரு பிரபலம், ஒரு பிரபல நடிகர் உள்ளிட்ட பலரையும் தாண்டித்தான் ஆவுடையப்பன் பெயர் 'தமிழா தமிழா' நிகழ்ச்சிக்கு டிக் செய்யப்பட்டது என்கிறார்கள்.

யூ டியூபைப் பொறுத்தவரையில், அது எல்லையில்லாத ஒரு களம். பாரம்பரிய ஊடகங்களுக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகள், நெறிமுறைகள், அங்கு கிடையாது. எனவே அங்கு நிகழ்ச்சிகளை நடத்துவதென்பது வேறு. தொலைக்காட்சியின் வீச்சோ வேறு மாதிரியானது.

ஆவுடையப்பன் இப்போதுதான் வந்திருக்கிறார். நிகழ்ச்சிக்குள் பொருந்திப் போவாரா? சேனல் எதிர்பார்த்த மாதிரி நிகழ்ச்சியை ஹிட் ஆக்குவாரா என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும். அதற்குள், இன்னொரு கோணத்தில்  சிலர் இந்த நிகழ்ச்சி குறித்தும், ஆவுடையப்பன் குறித்தும் விமர்சனங்களை வைக்கின்றனர்.

'ஜீ தமிழ் சேனலைப் பொறுத்தவரைக்கும் வடக்கே இருக்கும் அதன் தலைமை மென்மையான ஒரு பா.ஜ.க. சார்புப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. ஆனால் இங்கு, அந்த சேனலில் இருக்கும் சிலர், சேனலுக்கு சிக்கல்களை உண்டாக்கி வருகின்றனர். முன்பொரு முறை இந்தச் சேனலில் ஒளிபரப்பான 'ஜூனியர் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடியைக் கலாய்ப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக பாரதிய ஜனதாக் கட்சியினர் சேனல் அலுலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதெல்லாம் நடந்தது.

கரு.பழனியப்பனைத் தொகுப்பாளராகப் போட்டு 'தமிழா தமிழா' நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோதே எப்படியும் பிரச்னை வரும்னு தெரியும். அதேபோல வந்ததா இல்லையா?

'சமூகநீதி, சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல் கசப்பாக இருக்குமெனில் அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டுவருவதே நல்லது' என அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய போது குறிப்பிட்டதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டினால் பொருத்தமா இருக்கும்.

Tamizha Tamizha
TV Serial : மனைவியின் மரணத்தை மறைக்க நினைத்தாரா O.N.Ratnam - சிறிய இடைவேளைக்குப் பிறகு Epi 14

இப்போ என்னன்னா, கரு.பழனியப்பனுக்குப் பதிலா வந்திருக்கிற ஆவுடையப்பன் மீதும் அரசியல் சாயத்தைத் தவிர்க்க முடியலை. உடைச்சுப் பேசனும்னா, ஆவுடையப்பனும் ஒரு பா.ஜ.க எதிர்ப்பாளர்தான். ஏற்கெனவே குறிப்பிட்ட மாதிரி சேனல்ல இருக்கிற அந்தக் குறிப்பிட்ட சிலரால்தான் கரு பழனியப்பன் மாதிரியே சிந்தனை கொண்ட ஆவுடையப்பன் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார். அதனால இனியும் சிக்கலில்லாமப் போகும்னெல்லாம் சொல்ல முடியாது. விவாதத்துக்கு அரசியல் தொடர்புடைய தலைப்புகள் எடுத்தா, அப்பத் தேவையில்லாத சிக்கல்கள் வரலாம்' என்கின்றனர் இவர்கள்.

ஆவுடையப்பன் மீதான இந்த அரசியல் சாயம் குறித்து அவரிடமே கேட்டோம்.

'எல்லா மனிதருக்குமே சார்புனு ஒண்ணு இருக்கும்னுதான் சொல்வேன். நான் இந்தப் பக்கமும் இல்லை; அந்தப் பக்கமும் இல்லைனு ஒருத்தர் சொன்னா அது அர்த்தமற்றதாகவே தெரியும். என்னைப் பொறுத்தவரை நான் பார்க்கிற, எனக்குக் கொடுக்கப்பட்ட வேலைக்கு நூறு சதவிகிதம் உண்மையா நேர்மையா நடந்துக்கணும்னு நினைக்கிறேன். அப்படிதான் நடந்துட்டு வர்றேன்.

மீடியா மாதிரியான தளங்கள்ல அரசியல் சாயங்கள் தவிர்க்க முடியாது. அதுக்கு பெரிசா ரியாக்ட் செய்யத் தேவையில்லைனு நினைக்கிறேன். என்னுடைய திருமணத்துக்கு வந்து வாழ்த்தினாங்க தமிழிசை சௌந்தர்ராஜன். 'தமிழா தமிழா' முதல் எபிசோடுலயும் அவங்க சிறப்பு விருந்தினர். அப்ப 'சென்டிமென்டா இருக்கில்ல மேம்' என அவங்ககிட்ட சொன்னேன். நான் பா.ஜ.க. எதிர்ப்பாளர்னு சொல்றவங்களுக்காக இந்த விஷயத்தைச் சொல்றேன்.

அப்படின்னா 'நீங்க பா.ஜ.க ஆதரவாளர்தானே'னு நீங்க அடுத்த கேள்விக்குப் போனீங்கன்னா, என்னுடைய பதில் நோ கமென்ட்தான்' எனச் சிரிக்கிறார்.

அடுத்த வாரம் பார்க்கலாம்.

Tamizha Tamizha
Serials : கணவர் மீது ரச்சிதா புகார் - டைம்பாஸ் கட்டுரை காரணமா? - சிறிய இடைவேளைக்குப் பிறகு|Epi 19

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com