அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் மாலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
புழல் சிறை கைதிகளுக்கு காலை உணவு பொங்கல், உப்புமா, கஞ்சி போன்றவை மாறி மாறி வழங்கப்படுகின்றது. இந்த உணவில் இருந்து முதல் வகுப்பு சிறைவாசியான செந்தில்பாலாஜி பிரத்யேக உணவாக சிறையில் உள்ள கேண்டீனில் இருந்து இட்லி, தோசை போன்றவற்றை வாங்கி தருமாறு கேட்கலாம்.
இட்லி, தோசை எல்லாம் மற்ற கைதிகளுக்கு எப்போதுமே வழங்கப்படுவதில்லை. மதிய உணவாக சாதம், சாம்பார், கூட்டு ஆகியவை மற்ற கைதிகளுக்கும் முதல் வகுப்பு கைதிகள் விரும்பினால் சாப்பிடலாம். இல்லையெனில் கேண்டீனில் கிடைக்கும் சாப்பாட்டை வாங்கி சாப்பிடலாம்.
இதே போன்று இரவு உணவையும் அவர்கள் விரும்பியபடி டிபனாகவே எடுத்துக் கொள்ளலாம். முதல் வகுப்பு கைதிகளுக்கு சிறப்பு உணவாக வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறி வழங்கப்படுவது வழக்கம். அதே நேரத்தில் தனக்கு அசைவ உணவு வேண்டாம் என்று கைதி கோரினால் சைவ உணவாக அவருக்கு சாதத்தோடு பிசைந்து சாப்பிட நெய் வழங்கப்படும். வாழைப்பழமும் கொடுக்கப்படும். செந்தில் பாலாஜி இவற்றில் ஏதாவது ஒன்றை கேட்டு வாங்கி சாப்பிடலாம்.