Tamil serial Timepassonline
சினிமா

Serials : டப்பிங் ஆர்ட்டிஸ் Gee Gee குடும்பத்தில் வீசும் புயல் - சிறிய இடைவேளைக்கு பின் |Epi 16

அய்யனார் ராஜன்

சின்னத்திரையின் சாபமோ என்னவோ தெரியவில்லை, சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பலரது வாழ்க்கைதான் சண்டை, சச்சரவுகள், விவாகரத்து என போய்க்கொண்டே இருக்கிறதெனப் பார்த்தால், ஸ்க்ரீனுக்குப் பின்னால் இருப்பவர்களும் தப்புவதில்லை. இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் பின்னணிக் குரல் கொடுப்பதில் முன்னணியில் இருக்கும் ஜி.ஜி. எனப்படும் ஜெசிந்தா பெர்னாடி.

‘சரவணன் மீனாட்சி’ தொடரில் ஸ்ரீஜா, பிறகு ரச்சிதா, தற்போது சன் டிவியில் நம்பர் ஒன் இடத்திலிருக்கும் ‘கயல்’ சீரியலில் ஹீரோயின் சைத்ரா ஆகியோருக்கு டப்பிங் கொடுத்து வருபவர்தான் இந்த ஜி.ஜி. பா.ரஞ்சித் இயக்கிய மதராஸ் படத்திலும் கதாநாயகிக்கு குரல் கொடுத்தது இவர்தான்.

இவரது வாழ்க்கையில் வீசும் சூறாவளி குறித்துதான் சின்னத்திரை வட்டாரத்தில் இப்போது ஒரே பேச்சு.

என்ன விவகாரம் எனக் காது கொடுத்தோம்.

‘’டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஜி.ஜி.க்கும் லாரன்ஸ் அமல்ராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. லாரன்ஸ் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் செஃப்பா இருக்கார். நல்லாவே சம்பாதிக்கிறார். இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கு.

கல்யாணமான ஆரம்ப காலத்துல தம்பதிக்கிடையில் எந்தப் பிரச்னையுமில்லாமப் போயிட்டிருந்தது.

ஆனா, போகப்போக குடும்பத்துல என்ன பிரச்னைனு தெரியலை. கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடுன்னு பேச்சுகள் வெளியாகின. ஜி.ஜி.யின் நடவடிக்கைகள், உறவினர்கள், ஏன் அவருடைய பெற்றோரிடமே அவர் நடந்து கொண்ட விதமெல்லாம் பார்த்த லாரன்ஸ், அதைக் கண்டிச்சிருக்கார். உடனே கோபித்துக் கொண்ட ஜி.ஜி. வீட்டை விட்டு வெளியேறி தனிக்குடித்தனம் போயிட்டாங்க. லாரன்சுமே மகளின் எதிர்காலத்தை நினைச்சு சட்டப்படி பிரிவதற்கான முயற்சிகளைச் செய்யாம ஒதுங்கியிருக்கார்’’ என்கிறார்கள், ஜி.ஜி.யை நெருக்கமாக அறிந்த அவரது நண்பர்கள் சிலர்.

இன்னும் சிலரிடம் பேசிய போது,

’’ஜி.ஜி. ஒரு எக்ஸலண்ட் டப்பிங் ஆர்ட்டிஸ்ட். ஒரேநேரத்துல சன் டிவி, விஜய், ஜீ தமிழ்னு எல்லா முன்னணி சேனல்களிலும் டப்பிங் கொடுத்திட்டிருப்பார். இன்னைக்கு இருக்கிற சீரியல் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள்லயே பிசியா இருக்கிற ஒருத்தர்னு இவரை இண்டஸ்ட்ரியில சொல்வாங்க. பல ஹீரோயின்களுக்குக் குரல் கொடுத்துள்ளார், அவருடைய பர்சனல் வாழ்க்கை பத்தி எங்களுக்குப் பெரிசா தெரியாது. அதேநேரம், அவர்கிட்ட பொதுவா ஒரு குணம் உண்டு. ‘அட்வைஸ் பண்றேன்’னு சொல்லி, மத்தவங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு, அந்தப் பிரச்னையையும் பெரிசாக்கி, இவரும் பிரச்னைகளைச் சந்திச்சிருக்கார். நிறைய சம்பவங்கள் அப்படி நடந்திருக்கு.

‘சரவணன் மீனாட்சி’ ரச்சிதாவுக்கு நெருக்கமான தோழின்னு பொது இடங்கள்ல சொல்லிக்கொள்கிற இதே ஜி.ஜி.தான் ரச்சிதாவுக்கும் அவரது கணவரான தினேஷுக்கும் இடையில் உண்டான பிரச்னையில் கூட மூக்கை நுழைத்து விவகாரத்தைப் பெரிசாக்கிட்டாங்கனு தினேஷே அவருடைய நட்பு வட்டாரத்தில் வருத்தப்பட்டிருக்கார்னு கேள்விப்பட்டோம். ரச்சிதா மட்டுமல்ல, சின்னத்திரையில் இன்னும் சிலரது குடும்பப் பிரச்னையிலும் ஃப்ரண்டுங்கிற பேர்ல தேவையில்லாமத் தலையிட்டார்னு ஜி.ஜி. மீது புகார்கள் உண்டு.

நாம என்ன செய்றோமோ, அதுதானே நமக்கும் நடக்கும். இப்ப ஜி.ஜி. வாழ்க்கையிலும் அதேதான் நடந்திருக்கு’’ என்கிறார்கள்.

ரச்சிதாவின் கணவர் தினேஷிடம் நாம் பேசினோம்.

‘’ஜி.ஜி. ரச்சிதாவுடைய நெருக்கமான ஃப்ரண்டா இருந்தாங்க. ரச்சிதா இவங்ககிட்ட நிறைய விஷயங்களை ஷேர் செய்திருக்காங்க. அப்பெல்லாம் இவங்க ரச்சிதாவுக்கு என்ன மாதிரி அட்வைஸ் பண்ணினாங்க, ரச்சிதா அதை எப்படி எடுத்துக்கிட்டாங்கன்னெல்லாம் பழைய விஷயத்தைப் பேசறதுல எனக்கு விருப்பமில்லை.

பொதுவா கணவன் மனைவி பிரச்னைன்னா, அதுல நண்பர்கள்ங்கிற போர்வையில் தேர்டு பார்ட்டி இன்ஃபுளுயன்ஸ் இருந்தா பிரச்னை பெரிசாத்தான் ஆகும். எங்க பிரச்னையிலும் அப்படித்தான் நடந்திருக்குமோன்னுதான் எனக்கு நினைக்கத் தோணுது. ஒருவேளை எங்க குடும்பப் பிரச்னையிலும் இவங்களுடைய தேவையில்லாத தலையீடு இருக்குனு உறுதியாத் தெரியவந்தா அவங்களை வீடுதேடிப் போய் நாலுவார்த்தையாச்சும் கேக்காம நானுமே விடப் போறதில்லை. அதேநேரம் அவங்க வீட்டுல என்ன நடந்ததுங்கிற பர்சனல் விவகாரம் பத்தித் தெரிஞ்சுக்கிட நான் விரும்பலை. அவங்களுக்கு வேணும்னா அடுத்தவங்க குடும்பப் பிரச்னையில தலையிடக்கூடாதுங்கிற நாகரிகம் தெரியாம இருக்கலாம். எனக்கு அந்த நாகரிகம் இருக்கு’’ என முடித்துக் கொண்டார்.

ஜி.ஜி. வீட்டில் நிகழும் இந்தக் குடும்பப் பிரச்னையைத் தீர்க்க முயன்ற அவரது பெற்றோரே, ஒருகட்டத்தில் ‘இது முடியாது; நடக்கறது நடக்கட்டும்’ என ஒதுங்கி விட்டார்களாம்.

பல பிரச்னைகளுக்குக் காலம்தான் தீர்வு சொல்ல வேண்டும் போல.



அடுத்த வாரம் பார்க்கலாம்.