Virat Kohli
Virat Kohli Virat Kohli
Lifestyle

IPL சுவாரஸ்யங்கள் : Virat Kohli ஏன் ஐபிஎல் இல் பௌலிங் போடுவதில்லை? - CSK vs RCB

Ayyappan

விராத் கோலி - பேட்டிங்ல மகாசூரன், ஃபீல்டிங்ல அசைச்சுக்க முடியாது, பௌலர் விக்கெட் எடுத்தா அவருக்கும் மேல இவரோட விக்கெட் செலிப்ரேஷன் இருக்கும். சர்வதேச டி20-ல தான் வீசுன முதல் பந்துலயே கெவின் பீட்டர்சன் விக்கெட்ட எடுத்தவரு. அப்படியிருக்க கோலி ஏன் ஐபிஎல்ல மட்டும் பௌலிங் போட மாட்ராரு ??? வெற்றி ஊர்ஜிதமான பிறகு சமயத்துல விக்கெட் கீப்பர்கள்கூட பௌலிங் போடுவாங்க. எல்லாத்துலயும் தனது தடம் இருக்கனும்னு ஆசைப்படற கோலி ஏன் அதை செய்ய மாட்ராரு?

`Post Traumatic Disorder' - நடந்த சம்பவங்கள் மூளைல பதிஞ்சு அதோட நினைவுகளே நம்மள ஆட்டிப்படைக்குற நிலைமை. ஆறு பந்துகளையும் யுவராஜ் சிங் சிக்ஸர்களாக்குனப்போ ஸ்டூவர்ட் பிராட், ரிங்கு சிங் ஐந்து சிக்ஸர்கள அடிச்சப்போ யாஷ் தயால், மூன்று டக் அவுட்களை சந்திச்ச சூர்யக்குமார் யாதவ் எல்லோருமே இந்த வலிய அனுபவிச்சுருப்பாங்க. இருந்தாலும் இந்த ஜோன்ல இருந்து விளையாட்டு வீரர்கள் மீண்டு வர ஒரு நல்ல பெர்ஃபார்மன்ஸ் போதும். ஆனா ஒரு சிலரால அத அவ்வளவு ஈசியா எடுத்துக்க முடியாது.

அடுத்தமுறை பேட்டிங் பண்ணனும் பந்து வீசனும்னு நினைச்சாலே பழைய பயம் மனசைக் கவ்வி செயல்பட விடாம செஞ்சுடும். அப்படியொரு வலியதான் கோலி 2012ல சிஎஸ்கேவுக்கு எதிரா பந்து வீசுறப்போ சந்திச்சாரு. அப்போ நடந்த சம்பவத்துல இருந்து மீள முடியாமதான் இப்போவரை ஐபிஎல்ல கோலி பெருசா பௌலிங்கே போட மாட்ராரு.

2012ல ஆர்சிபிக்கு மட்டும் கருணை காட்டாத அதே சின்னசாமி ஸ்டேடியத்தின் பேட்டிங் பேரைடைஸ்ல ஒரு ஹை ஸ்கோரிங் கேம். ஆர்சிபி வச்ச 206 ரன்கள் இலக்க சிஎஸ்கே துரத்தனும். டூ ப்ளஸ்ஸிஸ் 71 ரன்கள், தோனி 171 ஸ்ட்ரைக்ரேட்ல 41 ரன்கள்னு அடிச்சுருந்தாலும் கடைசி 2 ஓவர்கள்ல 43 அடிக்கனும்னு வந்து நின்னுடுச்சு. ஆர்சிபிக்கு அப்போவே ஜெயிச்ச நினைப்பு வந்துடுச்சு. அதனால கடைசி ஓவரை வினய் குமார் போடட்டும்னு கோலிக்கு 19-வது ஓவரை அப்போதைய கேப்டன் வெட்டோரி தந்தாரு.

மிஞ்சிப் போனா ஒன்றிரண்டு பந்துகள் சரியான லைன் அண்ட் லெந்த்ல விழாம போனாக்கூட அதிகபட்சமா 10 ரன்கள் போகும்ன்றது அவரோட கணக்கு. ஆனா நடந்ததே வேறு. கோலியோட பாலை சந்திச்ச ஆல்பி மார்கெல் அன்னைக்கு கொலைவெறில இருந்துருப்பாரு போல. எப்படி போட்டாலும் அடிவிழுந்தது. இரண்டு பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்களோட 28 ரன்கள் வந்துடுச்சு. ஒரு கட்டத்தில் ஆர்சிபி பக்கம் முடிஞ்சதா நினைச்ச போட்டி மறுபடியும் சிஎஸ்கேவுக்கான ஜன்னல திறக்க அதன் வழியாவே அடுத்த ஓவர்ல வினய் குமாரோட பந்துகள ஒருகை பார்த்து பிராவோ சிஎஸ்கேவை ஜெயிக்க வச்சுட்டாரு. டெத் ஓவர் பரிதாபம் ஆர்சிபியோட அஜெண்டால ஊறிப் போனதுதானே?

இந்தத் தோல்விய ஆர்சிபிக்கு பழகுன ஒன்னுதான். ஆனாலும் கோலியால இத அவ்வளவு எளிதாக எடுத்துக்க முடியல. எந்தளவுன்னா அதன்பின் கோலி ஐபிஎல்ல பௌலிங் போடறதையே தவிர்த்துட்டாரு. 2015, 2016ல கூட வேற வழி இல்லாம ஓரிரு ஓவர்கள்தான் போட்ருந்தாரு. அந்தளவு கோலியை மனசளவுல ஆல்பி மார்க்கெல்லோட ஓவர் பாதிச்சுடுச்சு.