பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான நடிகை அதியா ஷெட்டிக்கும் நேற்று மாலை திருமணம் நடைபெற்றது.
மகாராஷ்ட்ரா மாநிலம் புனே அருகில் உள்ள கண்டாலாவில் இருக்கும் சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நடைபெற்ற இத்திருமணத்தில், பாலிவுட் மற்றும் கிரிக்கெட் உலக பிரபலங்கள் பங்கேற்றனர். திருமணத்திற்கு பிறகு அதியா ஷெட்டியும், கே.எல்.ராகுலும் சேர்ந்து டிவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டனர்.
அந்த டிவிட்டர் செய்தியில், "இன்று நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டில் திருமணம் செய்து கொண்டோம். இது மகிழ்ச்சியையும், அமைதியையும் எங்களுக்கு கொடுத்தது. நன்றியுணர்வும், அன்பும் நிறைந்த இதயத்துடன் இந்த ஒற்றுமை பயணத்தில் உங்கள் ஆசிர்வாதங்களைக் கோருகிறோம்" என்று தெரிவித்திருந்தனர்.
இதே போல கே.எல்.ராகுல் தனியாக பதிவிட்டுள்ள தனது டிவிட்டர் செய்தியில், "உனது ஒலியில் காதலிக்கக் கற்றுக்கொண்டேன். இன்று எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம்" என்று குறிப்பிட்டு நெகிழ்ந்திருந்தார்.
ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு திருமண வரவேற்பு இருக்கும் என்று நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்தார்.
இந்த காதல் திருமணத்திற்கு, சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.