திருக்குறள்: ஆளுநர் ‘ரவி’மேலழகர் உரை!

நான், மோடி, அமித் ஷா, அண்ணாமலை ஆகியோரைத் தவிர, யார் எதைச் சொன்னாலும், நம்பிவிடாதீர்கள். உண்மையை குருமூர்த்தி, மாரிதாஸ், அர்ஜூன் சம்பத், பாண்டே போன்ற அறிஞர்களிடம் கேட்பதுதான் அறிவுடைமையாகும்.
திருக்குறள்
திருக்குறள்டைம்பாஸ்

“திருக்குறளை ஜி.யு.போப் தப்புத்தப்பாய் மொழிபெயர்த்திருக்கிறார்!” என்று கண்டுபிடித்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆர்வக் கோளாறில், பரிமேலழகர் போல ரவிமேலழகராக மாறி திருக்குறளுக்கு உரை எழுதிவிடுவார் போல் தெரிகிறது.

தமிழறிஞர்கள், டாஸ்மாக் கவிஞர்கள், பள்ளிக்கூடப் பையன்கள் என்று யார் யாரெல்லாமோ திருக்குறளுக்கு உரை எழுதிவிட்டார்கள். ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதினால் எப்படியிருக்கும் என்றும்தான் கற்பனை பண்ணிப் பார்த்துவிடுவோமே?!

ரவிமேலழகர் முன்னுரை:

 சமஸ்கிருதத பண்டிதரும், நான்கு வேதங்களையும் அறிந்தவருமான ஸ்ரீவள்ளுவ மகரிஷி, தமிழ் மக்களுக்கும் வேதத்தின் சாரத்தைத் தருவதற்காக தன் மனதுக்குள்ளேயே குறள்களை யாத்தார். பின்  கணபதி ஹோமம் செய்து, “விக்னேஸ்வரா... எனக்கு இந்த நீசபாஷையில் பிழையின்றி எழுதுவதில் தயக்கம் இருக்கிறது. எனவே, முருகனின் அண்ணனான நீர்தான், நான் சொல்லச் சொல்ல தமிழில் எழுதித்தர வேண்டும்” என்று பிரார்த்தித்தார்.

“ஏற்கெனவே, வியாசர் சொன்னாரென்று ‘மஹாபாரதம்’ எனும் மெஹா தொடரெழுதி என் தந்தத்தின் முனையே மழுங்கிவிட்டது. கட்டைப் பென்சில் போல இருக்கும் அதை வைத்து மறுபடியும் இதிகாசம் எல்லாம் எழுத முடியாது. எனவே, சுருக்கமாகச் சொல்லித் தொலையும்” என்றார் கணபதி.

அப்படி எழுதப்பட்டதுதான் ஸ்ரீகுறள் (திருக்குறள் என்பது திரிபு) எனும் வேதச் சுருக்கம். அதற்கு இதுவரை எழுதப்பட்ட உரைகள் எல்லாம் பிழையாக இருப்பதால், சமஸ்கிருதம் படித்த நானே, மோடி யுகத்துக்கு ஏற்றபடி அதை மொழிபெயர்க்கத் துணிந்தேன். இந்தப் பிரதியைப் படித்துப் பார்த்து சில திருத்தங்களைச் சொன்ன மோடி ஜி, யோகி ஜி-க்கும், ஃப்ரூப் பார்த்த ஆர்.எஸ்.எஸ் கர சேவகர்களுக்கும் (நோ நோ, அவர் இல்லைங்க ஜி!) நன்றி!

திருக்குறள்
தொடர்: 90-ஸ் கிட்ஸ கிரிக்கெட் - 'Street Cricket Rules'

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


திருவள்ளுவர் ஒரு ஆன்மிகவாதி மட்டுமல்ல சனாதனவாதி. அதனால்தான் ரிக் வேதத்தில் இருந்து ‘ஆதிபகவன்’ என்ற வார்த்தையை எடுத்தாண்டிருக்கிறார். உலக மொழிகள் எல்லாம் ‘அ’ என்ற சமஸ்கிருத எழுத்தில் தொடங்குவதுபோல, யோகி 'ஆதி'த்யநாத்தின் நல்லாட்சி நாடு முழுக்க பரவும் என்பதே இக்குறளுக்கான தெளிவுரை.
 

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண் டும் இடும்பை இல.


உங்களுக்கு பா.ஜ.க-வைப் பிடிக்கிறதோ இல்லையோ, கட்டாயம் அந்தக் கட்சியில் சேர்ந்துவிடுங்கள். அப்படிச் சேர்ந்துவிட்டால் அமலாக்கத்துறை, சி.பி.ஐ, ஐ.டி என இடும்பைத் தரும் எந்தவித ரெய்டும் உங்கள் வாசலை அண்டாது என்கிறார் ஸ்ரீ லஸ்ரீ வள்ளுவ பரமாச்சாரியார்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.


ஒப்பாரும் மிக்காருமில்லாத தெய்வத் திருமகன் மோடியின் அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை என்ற அரிய கருத்தை ‘தோ’ வரிகளில் அழகாகச் சொல்லியிருக்கிறார் அய்யன் வள்ளுவர்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.


‘வன்முறை’ அதிகாரத்தில் வரும் இந்தக் குறளில், துப்பாக்கியை பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால்தான் பதில் சொல்ல வேண்டும். அதாவது தோட்டா மழை பொழியவேண்டும்... துளியும் சகிப்புத்தன்மை தேவையில்லை என்று பொட்டிலடித்தாற்போல் விளக்கியிருக்கிறார்.
 
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.


‘நீட்’ வந்த பிறகுதான், மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை அதிகரித்திருக்கிறது. எனவே, நீட் தேர்வைப் பழித்துப் பேசுபவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று நயமாக எடுத்துரைக்கிறார்.
இந்தக் குறளின் வழி நின்றுதான், நீட்டலும் மழித்தலும் வேண்டாமென்று மோடி நீண்ட தாடி வளர்த்ததாகவும் சிலர் அர்த்தம் சொல்வர். அதுவும்கூட சரியான பதவுரைதான்.

 
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.


தன் மகன் நற்பண்பு நிறைந்த ‘ஆர்.எஸ்.எஸ் சாஹா’வில் பயிற்சி பெற்றவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள். பாரத் மாதா கி ஜே என்கிறார் வள்ளுவ மகரிஷி!

திருக்குறள்
தொடர்: நான் நிருபன் - 'Charming இசையமைப்பாளர்!'

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.


நன்றாகச் சிந்தித்த பிறகுதான் செயலில் இறங்க வேண்டும் என்பதில்லை. அப்படிச் சிந்தித்தால் கலவரம் செய்ய மாட்டீர்கள், பள்ளிவாசலை இடிக்க மாட்டீர்கள், கொலை செய்ய மாட்டீர்கள். எனவே, யோசிக்காமல் செயல்படுங்கள்… உங்களை விடுவிப்பது ஆள்வோரின் பொறுப்பு என்கிறார் நம் ஆன்மிக கவி..

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.


மாடு மேய்ப்பதே அழிவற்ற செல்வமாகும். அதற்கு இணையான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை. கல்வி, உயர்கல்வி என்று திரிவது கேடு தரும்.  

யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு.


குட்டி நாய் குரைத்து பெரிய நாய் கல்லடி வாங்குவதைப் போல, எச்.ராஜா, அண்ணாமலை போன்ற பிராந்தியத் தலைவர்கள் ஏதாவது பேச, கடைசியில் மோடி, அமித் ஷா போன்ற பெருந்தலைவர்களே சொல்லடி வாங்குகிறார்கள். எனவே, யப்பா சாமிகளா… கொஞ்சம் நாக்கை அடக்குங்க!­­­

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.


நீட் தேர்வு ரத்து, துணைவேந்தர் நேரடி நியமனம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று மாநில அரசு வாக்குறுதி கொடுப்பது எளிது. ஆனால், அப்படிச் சொன்னதைச் செய்து முடிப்பதுதான் கடினம். தேச பக்தர்கள்தான் அதைச் செய்ய விட மாட்டார்களே!

 
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.


எதிர்க்கட்சிகள் (மட்டும்) கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது நல்லதல்ல. அந்தச் செயலால் அவர்கள் ஏற்கெனவே சம்பாதித்த சொத்துக்களையும் இழக்க நேரிடும். ஐ.டி, அமலாக்கத்துறை ரெய்டால் என்கிறார் சாணக்கிய வள்ளுவர்.

 
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.


ஒருவன் தன்னையும், தன் பதவியையும் காத்துக் கொள்ள வேண்டுமானால், முதலில் சீனத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் அந்தச் சீனமே, நம் பாரதத்தை அழித்துவிடும். அதனால்தான் அவர்கள் கிராமத்தைக் கட்டும்போதும், பாலத்தைக் கட்டியபோதும்கூட நாம் ராமர் கோயில் கட்டுவதிலும் ஜி.எஸ்.டி கட்ட வைப்பதிலுமே குறியாக இருந்தோம். ஜெய் ஶ்ரீராம்... ஜிங்பிங் ஸ்வாகா!

திருக்குறள்
தொடர்: அது ஒரு டவுசர் காலம் - 'ஆட்டுக்கார அண்ணாமலை'

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.


அனைவரும் கல்வி கற்றால், அது உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டையே போக்கி, சனாதனத்தையே அழித்துவிடும். எனவே, நீட், புதிய கல்விக் கொள்கை என அனைத்தையும் ‘பாடு’பட்டு செய்துமுடித்தே ஆகவேண்டும்.

 
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.


நான், மோடி, அமித் ஷா, அண்ணாமலை ஆகியோரைத் தவிர, வேறு யார் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பிவிடாதீர்கள். உண்மை எது என்பதை குருமூர்த்தி, மாரிதாஸ், அர்ஜூன் சம்பத், பாண்டே போன்ற அறிஞர்களிடம் கேட்டுத் தெளிவடைவதுதான் அறிவுடைமையாகும்.


ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.


நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதற்கேற்ப ஆட்சி நடத்துவதும், காய் நகர்த்துவதும்தான் மன்னனுக்கு அழகு. இதுதெரியாமல், நேரடியாக கூரையைப் பிய்த்துப் பார்த்ததால்தான் பன்வாரிலாலை பார்சல் செய்துவிட்டு, தமிழ்நாட்டு ஆளுநராக என்னை நியமித்திருக்கிறார் மோடி ஜி.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.


பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும் என்றால், அந்தப் பாராட்டே நமக்குத் தேவையில்லை. நம்மைப் பொறுத்தவரையில் மக்களைவிட மாடும், நாட்டைவிட கார்ப்பரேட்டும்தான் முக்கியம்!


உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.


ஐயகோ… எல்லையில் ராணுவ வீரர்கள் போராடிக்கொண்டிருக்கையில், நீங்கள் மக்களுக்கு இலவசம் கொடுப்பது எவ்வளவு கொடுமையானது? அதனால்தானே நாங்கள் ராணுவ வீரர்களையே பென்சன் இல்லாமல் ‘வெறுங்கை’யுடன் வீட்டுக்கு அனுப்பிவைக்க ‘அக்னி பாத்’ திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறோம் என்று ‘மங்கி பாத்’தில் பாடியிருக்கிறார் மோடி ஜி!

 
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.


சரியான செயலைத் தேர்ந்தெடுத்து, அதனை நிறைவேற்றும் வழிவகைகளை ஆராய்ந்து செய்வதும், எடுத்த முடிவை உறுதிபட நிறைவேற்றும் ஆற்றல் கொண்டிருப்பதுமே அமைச்சருக்குரிய தகுதியாம். அப்படியானவர்கள் யாரும் மோடி அமைச்சரவையில் இல்லை என்பதே பாரதிய ஜனதா கட்சியின் பெருமை!  ஒருதலைபட்சமாகச் செயல்பட, ஒரு தலைவன் மட்டும் போதாதா?!

- கே.கே.மகேஷ்.

திருக்குறள்
'காந்திக்கு பிறகு மோடி இருக்கிறார்' - டைம்பாஸ் மீம்ஸ்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com