Tamil Cinema timepass
சினிமா

Tamil Cinema : வாடகைக்கு காதலிக்கும் ஹீரோ, ஹீரோயின்கள் - ஒரு நக்கலான லிஸ்ட் !

டைம்பாஸ் அட்மின்

அந்தக் காலத்துல வந்த தமிழ் சினிமா கதாபாத்திரங்களோட ஃலைப்புல சிக்கல் வந்ததுன்னா ரெடிமேடா சில சொலிஷன்கள் இருக்கும் அதாவது.. பொண்ணோ, பையனோ அப்பாவியாவோ, குடிகாரனாவோ, ஊதாரியாவோ இருந்தா சாகுறதுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணினாதான் சொத்து கிடைக்கும் இல்லன்னா கோவிலுக்கு சேர்ந்துடும்னு உயில் எழுதுற கொடுமையெல்லாம் நடக்கும்.

அந்த நேரத்துலதான் படார்னு பல்பு எரிய.. வீட்டுல இருக்கிறவங்களை ஏமாத்த ’துட்டு தர்றேன் கொஞ்ச நாளைக்கு காதலனா, காதலியா இல்லன்னா கணவனா, மனைவியா நடிக்க தினக்கூலி, மன்த்லி சாலரி, மூணு வேளை சோறு, ராவானா பீருன்னு பேரம்பேசி ரோட்டுல போற ஹீரோ, ஹீரோயிணியைக் கூட்டிட்டு வருவாங்க.. அப்படி வந்து சில படங்கள் இதோ…

1 . ’திரிசூலம்’ னு அந்த காலத்துல வந்த படம். சிவாஜி மூணு வேஷத்துல பிரிச்சி மேஞ்ச படம். அப்பா சிவாஜிக்கு ஒரு மனைவி ரெண்டு புள்ளைங்க குடும்பம் ரெண்டாப் பிரிஞ்சு ஒண்ணு அம்மா கூடவும், இன்னொன்னு அப்பா கூடவும் இருப்பாங்க. அதுல ஒரு இளமையான சிவாஜி பேண்டு, சட்டையில குஞ்சத்தை மாட்டிகிட்டு ஒரு மார்க்கமா இருப்பாரு.

இன்னொரு பக்கம் ஸ்ரீபிரியா மேரேஜ் பண்ணிக்கலன்னா சொத்து போயிடும்னு மிரட்டுற தாத்தா வி.கே.ராமசாமி. அப்போதான் மூணு மாசத்துக்கு காதலனா நடி கூலி தர்றேன்னு குஞ்சம் சட்டை சிவாஜிய கூட்டிட்டுபோயி தாத்தாகிட்ட அறிமுகம் செய்ய, இப்போ தாத்தாவும் – நாடகக் காதலனும் சேர்ந்துகிட்டு ஸ்ரீபிரியாவ பாடாப் படுத்துவாங்க. ஏண்டா இவனை நடிக்க கூட்டிட்டு வந்தோம்னு தூண் தூணா போய் முட்டிக்கிட்டு நிக்கிற பிரியாவைப் பாத்தா நமக்கே சிவாஜி மேல காண்டாவும், காமெடியாவும் இருக்கும்.

2. ’சாந்தி’ னு ஒரு படம் இன்றைய 60 கே கிட்ஸ் எல்லாம் பையைத் தூக்கிகிட்டு பள்ளிக்கூடம் போன காலத்துல ரிலீஸான படம். வசதியான ஹீரோயின் விஜயகுமாரிக்கு கண் பார்வை இல்லாததால மேரேஜ் பிக்ஸ் ஆகாமவே இருக்கும். ஒரு தடவை சிவாஜியும் வந்து பார்த்துட்டு ’ரிஜெக்ட்’ பண்ணிட்டுப் போயிருப்பார். சிவாஜியோட குளோஸ் பிரெண்டு எஸ்.எஸ்.ஆர். அவர் சித்தப்பா எம்.ஆர்.ராதா தின்னதுலேர்ந்து, படிக்க வெச்சதுலேர்ந்து பைசா வசூல் பண்ற பார்ட்டி. கண்ணு தெரியாதுங்கிற விஷயத்தை மறைச்சி எஸ்.எஸ்.ஆருக்கு விஜயகுமாரிய கட்டி வெச்சிருவாரு.

தாலி கட்டுன மண மேடையிலேயே விஷயம் தெரிஞ்ச எஸ்.எஸ்.ஆர் விட்டுட்டு ஓடிப்போக, அவரை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வர சிவாஜி போக, போன இடத்துல சிவாஜியோட காட்டுக்கு வேட்டைக்குப் எஸ்.எஸ்.ஆரை புலி விரட்ட, அவர் ஆத்துல விழுந்து செத்துட்டதா சிவாஜி ராதாகிட்ட சொல்ல.. தாலி கட்டுனது நீதான்னு விஜயகுமாரிகிட்ட கண்ணு தெரியர வரைக்கும் நடின்னு ராதா கெஞ்ச வேற வழியில்லாம நண்பன் மனைவிக்கு புருஷனா நடிக்க பெருந்தன்மையோடவும், மன உளைச்சலோடவும் ஒத்துக்கிற கதைதான் ’சாந்தி’.

3. ’பிரியமுடன்’ படத்துல ஆக்ஸிடெண்டுல ரத்தம் கொடுத்தது வசந்தகுமார்னு ஒருத்தன். அவனோட பிரெண்டு அதே பெயர்ல வசந்தனான ஹீரோ விஜய். தன் பெயர்தான் வசந்தகுமாருன்னும். நான்தான் உனக்கு யூனிட் யூனிட்டா பிளெட்டு கொடுத்தேன்னு ஹீரோயின் கெளசல்யாகிட்ட ’டகால்டி’ வேலைய காட்டுறாரு. விஜய் சொன்னத நம்பி அந்த பொண்ணும் பாவம் பிளெட்டு கொடுத்து உசுரக் காப்பாத்துன ரத்தப் பாசத்துல போனாப் போவுதுன்னு ’லவ்ஸ்’ பண்ணுது.

உண்மையா ரத்தம் கொடுத்தது தன் பிரெண்டு வசந்தகுமார்தான்ற உலகமகா ஆள் மாறாட்ட உண்மைய மறைச்சி ’பூஜா வா.. பூஜா வா’ ன்னு டூயட்டெல்லாம் பாடுவாரு. ஒரு கட்டத்துல நண்பனுக்கும், கெளசல்யாவ ஆஸ்பத்ரியில காவ காத்த அவ அப்பாவுக்கும் உண்மை தெரிஞ்சு போகுது. கெளசல்யா மேல வெச்சிருந்த டன் கணக்கான ல்வ்வை விட்டுக்கொடுக்க முடியாம விஜய்… ’உனக்கு கிடைக்காத கெளசல்யா வேற யாருக்கும் கிடைக்கக்கூடாது’ ன்னு விஜயோட உள் மனது உசுப்பிவிட, காதலிய கொல்றதுக்கு கொலவெறியோட அலைவாரு இளைய தளபதி.

4 . ரெண்டு கேரக்டரில் நடிக்கும் ஒத்த ரஜினிக்கு நதியா – ராதான்னு ரெண்டு ஹீரோயின்களோட ஜமாய்த்த படம்தான் ’ராஜாதி ராஜா’. அப்பவியான ரஜினி கேம்பிரிட்சுக்கு ஓனர் கே.ஆர்.விஜயான்னாலும் நம்புற ஆளு. இன்னொருத்தர் பணக்கார அமெரிக்க ரிட்டன் ரஜினி. அப்பா இழவு சேதி கேட்டு இந்தியாவுல இருக்கிற சொந்த எஸ்டேட்டுக்கு வந்தா… அப்பா சாகலை சாகடிக்கப்பட்டார்கிற டீடெய்ல் தெரிஞ்சு பலி வாங்க பிளான் பண்றார்.

அப்றம் நண்பன் ஜனகராஜை எஸ்டேட் வாரிசுன்னும் தன்னை அவனோட ஏழை நண்பனாவும் டிராமா ஆடி எஸ்டேட்டுக்குள்ள நுழையிறாரு இந்த உண்மை தெரிஞ்சு அப்பாவைக் கொன்ன கொலைக்கார கோஷ்டி ஜனகராஜை கொன்னு, பலியை பணக்கார ரஜினி மேல போடுது.

கோர்ட்டும் தூக்கு தண்டனைக் கொடுத்து பேனா நிப்பிளை உடைக்குது. இப்பதான் தன்னை மாதிரியே இன்னொருத்தன் இருக்கான்னும், அவன் மாமா பொண்ணைக் கட்டிக்க 50 ஆயிரம் தேவைப்படுத்துன்னும் தெரிஞ்ச பணக்கார ரஜினி பணம் கொடுக்கவும், தனக்கு பதிலா உண்மை குற்றவாளிங்களை கண்டுப்புடிக்கிற வரைக்கும் ஜெயில்ல இருக்கணும்னும் ஜென்டில்மேன் அக்ரிமெண்டுல ஆள் மாத்திக்கிறாங்க.

இப்போ பணக்கார ரஜினிய காணாம ராதா துடிக்கிறதும், பணக்கார ரஜினி, நதியாகிட்ட மாட்டிகிட்டு தவிக்கிறதும் சுவாரசிய சூப்பு குடிச்ச மாதிரி படம் ஓட்டமா ஓடி வசூல் கேடயத்தை அள்ளிச்சு.

5 . ’பிரியமானவளே..’ ன்னு கதை நாயகனா விஜய்யும், நாயகியா சிம்ரனும் சென்டிமெண்ட் சிமெண்டு பூசின படம். வெளிநாட்டுல படிச்சிட்டு வந்த விஜய், இந்திய கலாச்சாரம் பத்தி பேசினாவே கல்லை தூக்கிட்டு அடிக்க வர்ற ஆள். ஆனா அவரோட அப்பா எஸ்.பி.பிக்கு அவர் எடையவிட அதிகமான பாரம் அவர் மனசுல இறங்குது. அதனால, தமிழ் பொண்ண மேரேஜ் பண்ணி வெச்சா அவனோட கேரேஜ் நல்லா இருக்கும்னு முடிவு பண்ணி விஜய்கிட்ட கேட்டா, ஒரு வருஷ ஒப்பந்தத்துல ஒஃய்ப்பா வந்தா ஓகேன்னு சொல்ல.. பாடுற அப்பாவோட உடம்பு ஆடிப்போகுது.

அப்பதான் ஆபீஸ்ல வேலை பாக்குற சிம்ரன்கிட்ட எஸ்.பி.பி அந்த ஒன் இயர் ஒப்பந்தத்தை சிரிக்காம சொல்லி, ’துட்டு பத்திக் கவலைப்படாத.. சாக்கு மூட்டைல கட்டித்தர்றேன்’ னு சத்தியம் பண்றாரு.. சிம்ரன் குடும்பத்து கடன் தொல்லை கண்ட நேரத்துல கழுத்தை நெரிக்க… ஒன் இயருக்கு மேல ஒரு நிமிஷம் கூட ஒத்துக்க மாட்டேன்ற கொள்கைப் பிடிப்போட ஒப்பந்த மனைவியா நடிக்க ஒத்துக்கிற படம்தான் ’பிரியமானவளே..’

- எம்.ஜி.கன்னியப்பன்.