Tamil Serial Tamil Serial
Lifestyle

'செல்ல'மாகப் பேசி வலை விரிக்கும் Tamil Serial ஹீரோ - ரசிகைகளே உஷார்|சிறிய இடைவேளைக்குப் பிறகு|Epi 10

டைம்பாஸ் அட்மின்

சீரியல்களைப் பொறுத்தவரை நடிகைகளுக்கே வாய்ப்பும் சம்பளமும் அதிகம். வாய்ப்புகள் இல்லை என்றாலும் நடிகைகள் நாலு கடைத் திறப்பு விழாக்களுக்குச் சென்று ஏதோவொரு வருமானத்தைப் பார்த்துக் கொள்கின்றனர். ஆனால் நடிகர்களின் நிலை?

இந்த இடத்தில்தான் சில நடிகர்கள் தடம் மாறுகின்றனர். பொருளாதாரம் மற்றும் வேறு சில தேவைகளுக்காகத் தங்களைப் பின் தொடரும் ரசிகர்கள் இல்லையில்லை, ரசிகைகளில், சிக்குபவர்களைப் பார்த்து தூண்டிலை வீசுகின்றனர். நடிகர்களின் சிலரின் இப்படியான வலையில் சிக்கி வெளியில் வர முடியாதபடி வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள் பல ரசிகைகள். சின்னத்திரை வட்டாரத்தில் இப்படியான கதைகள் நிறைய வலம் வருவதாலேயே இந்த எச்சரிக்கைக் கட்டுரை.

சில மாதங்களுக்கு முன் சிறைக்குச் சென்று வந்த, பெயரில் அறத்தைத் தாங்கிய ஊர்க்காரர் அந்த நடிகர். உடன் நடித்த நடிகையை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், அந்த நடிகை தங்களது திருமணம் குறித்து வெளியில் பேசியதாலேயே பிரச்னை தொடங்கியது. ஆரம்பத்தில் வழக்கமான 'புருஷன் பொண்டாட்டி சண்டை' என்கிற கோணத்திலேயே இந்த விவகாரத்தைப் பலரும் அணுகினர்.

ஆனால் நடிகர் சிறைக்குச் சென்ற பிறகுதான் கடந்த காலங்களில் அவர் செய்த வம்புதும்புகள் எல்லாம் வரிசை கட்டத் தொடங்கின. சொந்த ஊரில் அவருடைய அப்பா பெரிய பிசினஸ் புள்ளி. மதத் தலைவரும் கூட. நடிக்க வருவதற்கு முன் இந்த நடிகருக்கு வேறு பெயர். சொந்த ஊரில் இருந்த போதே அங்கு ஜெராக்ஸ் கடை வைத்திருந்த ஒரு பெண்ணை ஏமாற்றி, அது பிரச்னை ஆக, அந்தப் பெண்ணுக்கு ஏதோவொரு செட்டில்மென்டை செய்த அவருடைய அப்பா, பையனை சென்னைக்குக் கிளம்பும்படி கூறி விட்டார். தலைநகருக்கு வந்து மாடலிங்கில் இறங்கி, அப்படியே சீரியல் பக்கம் வந்த போது, தனது பெயரை மாற்றிக் கொண்டார் நடிகர்.

சும்மா சுத்திய போதே கண்டமேனிக்குத் திரிந்தவருக்கு டிவி பிரபலமும் சேர்ந்து கொள்ள, உடன் நடிக்கும் நடிகைகள், 'சார் நீங்க நல்லா நடிக்கிறீங்க' என வாண்டடாக வந்து சேரும் ரசிகைகள் எனப் பலரிடமும் பழகத் தொடங்கினார். பெண்களிடம் பேசி மயக்குவதில் மனிதர் படு கில்லாடியாம். 'செல்லம்மா', 'செல்லம்மா' என அவ்வளவு அன்பொழுகப் பேசியே மயக்குவாராம்.

நடிகைகளோ, ரசிகைகளோ பழகும் பெண்கள் யாராக இருந்தாலும் ஒரு விஷயத்தில் இவர் மிகத் தெளிவாக இருப்பாராம். அதாவது பொருளாதார ரீதியாக வசதியானவர்களாகப் பார்த்தே நட்பை (?) வளர்த்துக் கொள்வாராம். இவரது செலவுகளை எல்லாம் அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் கூடுமானவரை கல்யாணம் என்கிற சிக்கலுக்குள் நுழையாமலிருக்கவே முயற்சி செய்வாராம். மீறி எதிர்த்தரப்பு வற்புறுத்தினால், 'பார்த்துக்கலாம்' என்றபடி அவர்களின் வற்புறுத்தலுக்காக அதற்குச் சம்மதிப்பாராம்.

முதலில் வெளிநாட்டு ரசிகை ஒருவர் இவரிடம் சிக்க, அந்த ரசிகையை ரகசியமாய்த் திருமணம் செய்து கொண்டு அவருடைய நாட்டுக்கே சென்று விட்டார் நடிகர். ஆனால் சில ஆண்டுகளிலேயே அந்த ரசிகை இவருக்கு சலித்துப் போய் விட்டாரா, அல்லது அவர் செலவுக்குத் தரும் காசு குறைந்து விட்டதா தெரியவில்லை, அங்கேயே இன்னொரு ரசிகையுடன் சிநேகமாகி விட்டார்.

ரகசிய சிநேகிதம் ஒருகட்டத்தில் ஏமாந்த ரசிகைக்குத் தெரியவர, அவர் நேரடியாக நடிகரின் சொந்த ஊருக்கே சென்று அவரது வீட்டு வாசல் முன் உட்கார்ந்து விட்டார். பிறகென்ன, பழையபடி அவரது தந்தை ஒரு தொகையைக் கொடுத்து அந்த வெளிநாட்டு ரசிகையின் கணக்கை செட்டில் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்.

அப்பா இப்படி செட்டில் செய்யத் தயாராய் இருப்பதாலோ என்னவோ, மீண்டும் மீண்டும் அதே வேலையையே செய்து கொண்டிருக்கிறார் நடிகர். செட்டில் என்றால் அதில் இரண்டு வகையாம். பண மோசடி என்றால், எவ்வளவு பணமோ அதை மட்டும் தந்து விட வேண்டும். மாறாக இவரால் கர்ப்பமடைந்து கரு கலைப்பு என்றால் கூடுதலாக சிலபல லகரங்கள். இப்படியே தனது லீலைகளை நடிகர் அரங்கேற்றிக் கொண்டிருந்த நிலையில்தான் நடிகரைச் சிறைக்கு அனுப்பிய நடிகை அவரது வாழ்வில் வந்தார்.

மற்றவர்களைப் போல் இல்லை இந்த நடிகை. நடிகரின் வாரிசை வயிற்றில் சுமந்தவர், 'அவனைப் பத்தித் தெரிஞ்சிடுச்சு. ஒருத்தருடன் பழக்கிட்டிருக்கும் போதே, இன்னும் சிலருடன்னு எல்லார் கூடவுமே போலியாகவே பழகி.. இப்படியொரு ஆளை நான் என் வாழ்க்கையில் இதுவரை பார்த்ததே இல்லை. என் வாழ்க்கை இவனால் டேமேஜ் ஆகிடுச்சு. ஆனா இனியொரு பொண்ணு இவனால் பாதிக்கப்படக் கூடாதுன்னே, குழந்தையைப் பெத்தெடுக்கறதுன்னும் இவனைச் சிறைக்கு அனுப்பறதுன்னும் முடிவு பண்ணினேன்' என நடிகர் ஜெயிலுக்குப் போன நேரத்தில் பேட்டியே கொடுத்தார்.

இந்தப் பின்னணியில் தற்போது, நடிகரால் பாதிக்கப்பட்ட பலரும் தாங்கள் ஏமாந்த கதைகளைப் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டு, ஒரு நெட் ஒர்க்காக இயங்கி வருவதாகத் தெரிகிறது. அவர்களில் சிலரிடம் வீடியோ, ஆடியோக்கள் என ஏகப்பட்ட எவிடென்ஸ் இருப்பதாகவும் எந்த நேரத்திலும் அந்த ஆடியோக்கள் வெளிவந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்றும் கிசுகிசுக்கிறது டிவி வட்டாரம்.

சரி, ஜெயிலுக்குப் போய் ஜாமீனில் வந்திருக்கும் நிலையில், நடிகர் திருந்தியிருப்பாரே என்கிறீர்களா? அதுதான் இல்லை. திருமணம் செய்து அதைப் பதிவு செய்திருந்த போதும், புகார் கொடுத்த மனைவி இவரது குழந்தையைப் பெற்றெடுத்து விட்ட பிறகும்கூட, மனைவியையும் குழந்தையை வந்து பார்க்கவே இல்லை நடிகர்.

மாறாக, எதுகுறித்தும் அலட்டிக் கொள்ளாமல், தற்போது உடன் நடித்து வரும் இன்னொரு நடிகையுடனும் அவருக்கும் தெரியாமல், மிகச் சமீபமாக பக்கத்து மாநிலத்திலிருந்து சிக்கிய இன்னொரு ரசிகையுடனும் பொழுதைக் கழித்து வருகிறார். எனவே, ஏமாறும் ரசிகைகளே, உஷாராக இருக்க வேண்டியது நீங்கள்தான்!

- அய்யனார் ராஜன்.